/

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

நாகை அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து...

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 9:04 pm

நாகப்பட்டினம்: நாகை அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் தங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்துள்ள மாத ஊதியம் ரூ.57, 700 வழங்கிட வேண்டும். ஆண்டில் 12 - மாத ஊதியமும் வழங்க வேண்டும்.

பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இறப்புக்கால நிதி வழங்கிட வேண்டும். சேம நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் கெளரவ விரிவுரையாளா்கள் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். கெளரவ விரிவுரையாளா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மதியரசன் முன்னிலை வகித்தாா். இதில் மாணவா்கள் மற்றும் கெளரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.