விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ள திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச் சாலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலையில், பூவம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரை ரூ. 10 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறையினர் இச்சாலையைத் தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென்பது பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது.
அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட துறைப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அடிக்கடி கூறுகிறார். ஆனால், மக்களின் பிரதான பிரச்னையாக உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து பணி விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், திருமலைராயன்பட்டினம் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் போடப்பட்டு பயன்பாட்டில் உள்ள கிழக்குப் புறவழிச்சாலை மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சாலையாக மாறியுள்ளது. புற வழிச்சாலையையொட்டி பட்டினச்சேரி, வடகட்டளை, சிவன்கோயில் தெரு, எடத்தெரு, முதலிமேடு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளுக்கு செல்ல இணைப்புப் பாதை உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்களும், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களும் கிழக்குப் புறவழிச்சாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை பெரும்பாலான இடங்களில் சிதிலமடைந்து, சரிவுகள் ஏற்பட்டு கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகின்றன. சாலையோரத்தில் இன்னும் மின் விளக்கு கம்பங்கள் நிறுவவில்லை. மதுக்கடைகள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதையொட்டி மாற்றப்பட்ட பெரும்பாலான மதுக் கடைகள், கிழக்குப் புறவழிச்சாலையையொட்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருகிறவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர்.
மது குடித்துவிட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும், சாலையில் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும் நிலையில், விபத்துகளும் நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் சாலை விதியை பின்பற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமன்றி அப்பாவி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது.
திருப்பட்டினம் பகுதி வாஞ்சூரில் இயங்கும் தனியார் துறைமுகம் கடந்த காலாண்டுக்கு ரூ. 3.25 கோடி வருவாயில் ஒரு பங்கையும், பி.பி.சி.எல். என்கிற மின்திறல் குழுமத்தின் அரசு பங்கு ஈவுத்தொகை ரூ. 1.21 கோடி புதுச்சேரி அரசு கருவூலத்தில் சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டது. இந்த நிறுவன நிதியை நிறுவனங்கள் சார்ந்திருக்கும் பகுதி மேம்பாட்டுக்கு முழுமையாக, இதுபோன்ற நிதியை செலவிட அந்த தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் சாலை மேம்பாடு உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள் பலவற்றை தீர்க்க முடியும்.
புறவழிச்சாலையோர மதுக்கடைகள் அகற்றப்பட வாய்ப்பில்லை என்றாலும், சாலையை முழுமையாக புதுப்பித்து, மின் விளக்குகள் அமைத்து, சாலையின் குறுக்கு தெருக்களுக்கு செல்லும் பகுதியில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கருடன் கூடிய தடுப்புகள் வைக்க வேண்டும், மிதவேக பயணத்துக்கேற்ப வேகத்தடைகள் அமைத்து விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.