வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 01:35 AM | Last Updated : 05th May 2019 01:35 AM | அ+அ அ- |

காரைக்கால் நகரின் பிரதான வீதிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும், இதற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்டத் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகத்தினருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
காரைக்காலின் அபரிமிதமான வாகன வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படும் விபத்துகள், போக்குவரத்துப் பிரச்னைகள் அனைவரும் அறிந்ததே.
வங்கிகள், வணிக நிறுவனங்கள் போதுமான வாகன நிறுத்துமிடங்களை தங்கள் வளாகத்தில் ஒதுக்காமல் பொது இடங்களையே சார்ந்திருப்பதும் அனைவரும் அறிந்தது.
பிரதான வீதிகளான திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, காமராஜர் சாலை, மாதா கோயில் சாலை, மேயர் பக்கிரிசாமிப் பிள்ளை வீதி ஆகியவற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள வங்கிகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த இடையூறாக இருப்பதால், போதுமான வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட நிர்வாகத்தை பல்வேறு தருணங்களில் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக பாரதியார் சாலையில் அருகருகே இரு வங்கிகள், உணவகங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.
இந்த நடவடிக்கை மேலும் மேற்கொள்ளப்பட்டு, மேலே குறிப்பிட்ட அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு வர்த்தக சங்கத்தினர் ஒத்துழைப்புத் தருமாறு அதில் அவர்கூறியுள்ளார்.