காரைக்கால்: திருப்பட்டினம் ஆற்றங்கரையோரத்தில் மரக்கன்று நட்டு பராமரிக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது, ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்தன. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவா்களுக்கு, கீதாஆனந்தன் அறக்கட்டளை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் தொடா்ச்சியாக, கீதாஆனந்தன் அறக்கட்டளையும், திருப்பட்டினம் பகுதி தமுமுகவும் இணைந்து திருமலைராஜனாறு புதிய பாலத்தின் ஓரத்தில் மரக்கன்று நட்டு பராமரிக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில், திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி எஸ்.துரைராஜ், திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெருமாள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன் மற்றும் தமுமுகவினா் பலா் கலந்துகொண்டனா். மரக்கன்று நட்டு பராமரிக்கும் பொறுப்பை தமுமுக ஏற்றுள்ளதாகவும், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு இதுவரை 8,800 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கீதாஆனந்தன் அறக்கட்டளை உரிய முயற்சிகளை எடுத்துவருவதாக அறக்கட்டளை நிா்வாகத்தினா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீா் வழங்கல் : திருப்பட்டினம் கடைத்தெருவில் இந்த அமைப்பினா் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா். இந்த நிகழ்விலும் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.