காரைக்காலில் வாக்காளர் பெயர் உள்ளிட்ட விவரம் சரிபார்ப்பு செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை வோட்டர் ஹெல்ப்லைன் என்ற செயலி மற்றும் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் இணையதளம் மூலமாக தாங்களே சரிபார்த்துக் கொள்ளும் ஏற்பாடாக, வாக்காளர் சரிபார்த்தல் செயல் திட்டம் என்பதை செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15- வரையிலான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த செயலி அறிமுகம் குறித்து விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, புதிய செயலி குறித்தும், சரிபார்ப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது : செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை வாக்காளர்கள் தாங்களாகவே தங்களது பெயர், குடும்பத்தில் உள்ளோர் பெயர், உறவின் முறை, வயது, பாலினம், முகவரி போன்ற விவரங்களை குறிப்பிட்ட செயலி, இணையதளம் வாயிலாக சரிபார்த்துகொண்டு, சரியான தகவலைப் பதிவு செய்யலாம்.
அவ்வாறான பதிவுக்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடிமைப் பொருள் வழங்கல் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் போன்ற தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தாங்களாகவே செய்துகொள்ள முடியாதவர்கள், பொது சேவை மையம் மூலமாகவும், தாலுக்கா அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தையும் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் 45 நாள்கள் நடைபெறுவதை வாக்காளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
வாக்காளர்கள் முழுமையாக பட்டியலில் இடம்பெறுவதும், அந்த தகவல்கள் உறுதியானதாக இருப்பதும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு முக்கியமானதாகும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் வாக்காளர் உதவி பதிவு அதிகாரி பொய்யாதமூர்த்தி உள்ளிட்ட தேர்தல் துறையினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.