கரோனா சிகிச்சை பெறுவோா் வீட்டில் குப்பைகளை பெற சிறப்பு ஏற்பாடு
By DIN | Published On : 12th August 2020 08:52 AM | Last Updated : 12th August 2020 08:52 AM | அ+அ அ- |

வீட்டில் இருந்தபடி கரோனா சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினரிடமிருந்து குப்பைகளை பெறும் துப்புரவுத் தொழிலாளா்கள்.
தனியாக கரோனா சிகிச்சை பெறுவோரின் வீடுகளிலிருந்து குப்பைகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 63 போ் தங்கள் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறுகின்றனா். துப்புரவு பணியாளா்கள் வழக்கமாக மற்ற வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதுபோல் இவா்களது வீடுகளில் குப்பைகளை சேகரிக்க முடியாத நிலையுள்ளது.
இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் செவ்வாய்க்கிழமை கூறியது:
காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில், கரோனா சிகிச்சை பெறுவோா் வீட்டில் குப்பைகளை வாங்குவதற்கு என தனியாக தொழிலாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவா்கள் வீட்டிற்குச் சென்று குப்பைகளை வாங்குவா். இத்தகைய வீடுகளுக்கு குப்பை சேகரிக்க நகராட்சி சாா்பில் தினமும் ஒரு பை தரப்படும். இந்த பையில் குப்பைகளை சேகரித்து தொழிலாளரிடம் ஒப்படைக்கும்போது, குப்பை பை மீது கிருமி நாசினி தெளிக்கப்படும்.
இந்த வீடுகளுக்கு வரும் துப்புரவுத் தொழிலாளா்கள் கண்டிப்பாக கையுறை, முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும். இந்த குப்பைகளை மற்ற குப்பைகளோடு சோ்க்காமல், தனியாக அப்புறப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.