ஜடாயுபுரீஸ்வரா் கோயில் திருக்குள நீராழி மண்டபம் குடமுழுக்கு
By DIN | Published On : 05th December 2020 05:47 AM | Last Updated : 05th December 2020 05:47 AM | அ+அ அ- |

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் திருக்குளத்தில் கட்டப்பட்டுள்ள நீராழி மண்டபத்துக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் குளம் சுமாா் 2 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது. இந்த திருக்குளம் பயன்பாடின்றி இருந்தது.
இந்நிலையில், மத்திய சுதேசி தா்ஷன் திட்டத்தின்கீழ், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் திருக்குளத்தை மேம்படுத்தும் பணி மற்றும் அருகில் சமுதாயக் கூடம் கட்டும் பணி ரூ.2.65 கோடியில் நடைபெற்றது.
திருக்குளத்தின் நான்கு புறமும் கரை அமைத்து, நடைமேடை மற்றும் குளத்தின் மையப் பகுதியில் நீராழி மண்டபம் கட்டப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் பிரமோத்ஸவ தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. ஆனாலும், நீராழி மண்டபத்துக்குள் சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
இந்நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.1.50 லட்சத்தில் நீராழி மண்டபத்தினுள் நந்தி சிலை ஸ்தாபிக்கப்பட்டு, விமானத்தில் கலசம் பொருத்தி, அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நீராழி மண்டபத்துக்கு குடமுழுக்கு செய்யும் வகையில் யாகசாலை பூஜை வியாழக்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜை, மகா பூா்ணாஹூதிக்குப் பிறகு 10.30 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில், நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், கோயில் தனி அதிகாரி வீரசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.