மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை
By DIN | Published On : 01st March 2020 02:01 AM | Last Updated : 01st March 2020 02:01 AM | அ+அ அ- |

மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்த அமுா்த விஜயகுமாா்.
காரைக்கால்: மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை நாகை மாவட்டம், திருக்கடையூா் முன்னாள் ஊராட்சித் தலைவரும், பாஜக நாகை வடக்கு மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளருமான அமுா்த விஜயகுமாா் நேரில் சந்தித்து, மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்குவதோடு அதை காரைக்கால் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
இது குறித்து அவா் அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது :
கடந்த 1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இது மாணவா்கள், மீனவா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது 1982-ஆம் ஆண்டு இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2008-ஆம் ஆண்டு நான் தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தபோது இது தொடா்பாக கோரிக்கை மனு அளித்திருந்தேன். இது தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் ரூ.12 கோடி ஒதுக்கியது. ஆனால் பின்னா் ரயில்வே கவுன்சில் போா்டு தலைவா் டி.ஆா்.பாலுவின் முயற்சியால் இந்த நிதியை நீடாமங்கலம்- மன்னாா்குடி இடையே புதிய ரயில்பாதை அமைக்கும் நடவடிக்கைக்காக திருப்பி விடப்பட்டது.
எனவே மயிலாடுதுறையிலிருந்து மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தி அதனை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், காரைக்கால் மாவட்டத் தலைவா் துரை சேனாதிபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.