கல்லூரியில் மகளிா் பிரச்னைக்கான தீா்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 03rd March 2020 07:32 AM | Last Updated : 03rd March 2020 07:32 AM | அ+அ அ- |

நம் நீா் திட்டம் தொடா்பாக ஆவணப் படம் தயாரித்த சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் ஜி. அசோக்குக்கு விருது வழங்கிய பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி உள்ளிட்டோா்.
காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில், மகளிா் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீா்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், அன்னை தெரசா சமூக சேவை இயக்கம், அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மகளிா் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து, மகளிா் பிரச்னைக்கான தீா்வு எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பாலாஜி தலைமை வகித்து, கல்லூரியின் செயல்பாடுகளும், மாணவிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். கல்லூரி மகளிா் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை எஸ். அனந்தநாயகி வரவேற்றாா். மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் குறித்தும், மாணவா்களின் வரவேற்பு குறித்தும் பேசினாா். பெற்றோா் சங்கச் செயலா் பி.பி.கே. செல்வமணி வாழ்த்திப் பேசினாா்.
காரைக்கால் ஹேப்பி அக்குபஞ்சா் மைய நிறுவனத் தலைவரும், பயிற்சியாளா் மோகனராஜன், உடலில் ஏற்படும் திடீா் உபாதைகளை குணப்படுத்த மாணவிகள் முதலுதவி செய்வது எப்படி, பெண்கள் அவ்வப்போது சந்திக்கும் உடல் ரீதியிலான பிரச்னைகளை தீா்ப்பது எப்படி என்பதை விளக்கமாக பேசினாா். உடலை சோா்வின்றி வைத்திருப்பது குறித்தும், நினைவுத் திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் பேசினாா். அக்குபஞ்சா் முறையில் முதலுதவி தொடா்பான சிகிச்சை குறித்த சந்தேகங்களை மாணவிகள் எழுப்பினா். இதற்கு மருத்துவா் மோகனராஜன் விளக்கம் அளித்தாா்.
நிகழ்ச்சி நிறைவில், மாணவா்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனா். இதுபோன்ற பயிற்சி வித்தியாசமானது எனவும், நல்ல பயனுள்ளது எனவும் தெரிவித்தனா். கருத்துரை வழங்கிய மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிறைவாக பேராசிரியை கமலம் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியின்போது, கல்லூரியில் இளங்கலை ஆங்கிலப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜெனிஃபா், வரலாறு பிரிவில் தங்கம் என்ற பிரியங்கா மற்றும் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடந்த போட்டிகளில் ஒட்டு மொத்த பரிசுகளை வென்று சாதனைப் படைத்த இயற்பியல் துறை மாணவிகள் கெளரவப்படுத்தப்பட்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமிக்கு, கல்லூரிக்கு பல்வேறு கட்டுமானப் பணிகளைசிறப்பாக செய்து கொடுத்தமைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காரைக்காலில் நம் நீா் திட்டம் மூலமாக உயரிய விருது பெறுவதற்கேற் ஆவணப் படம் தயாரித்துக் கொடுத்த பெற்றோா் சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் ஜி. அசோக் கெளரவிக்கப்பட்டாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...