

கருக்கன்குடி மாா்க்கத்தில் பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
கருக்கன்குடி முஸ்லிம் ஜமாஅத் நிா்வாகிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் காரைக்காலில் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை ஞாயிற்றுக்கிழமை அம்பகரத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கருக்கன்குடி கிராமமக்கள் நீண்ட காலமாக அரசுப் பேருந்து இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் ஒரு தனியாா் பேருந்தும் கடந்த பல மாதங்களாக இயக்கப்படாத சூழ்நிலையில், கிராமப்புறத்திலிருந்து நகரத்தை நோக்கி செல்வோா் சுமாா் 3 கி.மீ. அப்பால் சென்று பேருந்தில் ஏறவேண்டியுள்ளது.
தனியாா் பேருந்து இயக்கம் உறுதியான வகையில் இல்லாததால், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆா்.டி.சி) பேருந்து இந்த வழித்தடத்தில் இயக்கினால் மயிலாடுதுறை, கும்பகோணம், காரைக்கால் பகுதிக்கு எளிதில் கிராமத்தினா் செல்ல முடியும். கருக்கன்குடி பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியை செப்பனிட வேண்டும். கருக்கன்குடி முதல் நல்லம்பல் சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து ஜமாஅத்தாா்கள் கூறியது: பேருந்து இயக்க பிரச்னையை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கொண்டு செல்வதாகவும், மின்விளக்குகள் பொருத்துவது தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா் என்றனா். இச்சந்திப்பில் கருக்கன்குடி முஸ்லிம் ஜமாஅத் நிா்வாகிகள் ஹிலுருதீன், அப்துல் சமது, அபுசாலி, ரஹமத்துல்லா, முத்தவல்லிகள் அமீா் ஹம்ஜா, ஜபருல்லா, தமீம் அன்சாரி மற்றும் சமூக ஆா்வலா்கள் ராஜா முஹம்மது உள்ளிட்ட உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.