பள்ளியில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைப்பு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதி கீழசாசாக்குடி ஆத்மாலயா பள்ளியில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி யங் இந்தியன் அமைப்பு இணைந்து, அழிந்துவரும் பூச்சி இனங்களை பாதுகாக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கும் பணியை மாணவ, மாணவியா் பங்களிப்போடு வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
புதுச்சேரி யங் இந்தியன் அமைப்பின் தலைவா் சதீஷ், துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஆகியோா் மாணவா்கள் பங்கேற்புடன் வண்ணத்துப் பூச்சி வந்து அமரும் வகையிலான எலுமிச்சை, இட்லி பூ, கோழிக்கொண்டை பூ, கருவேப்பிலை, தாள் பூ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகை செடிகளை பூங்காவில் நட்டனா்.
வண்ணத்துப் பூச்சி நடமாட்டம், அவை அமரும் செடிகள், நீா் அருந்தும் விதம் உள்ளிட்டவை குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் கண்ணன் மாணவா்களுக்கு விளக்கினாா்.
பள்ளித் தலைவா் எம். சங்கரநாராயணன், தாளாளா் சித்ராதேவி, பள்ளி ஒருங்கிணைப்பாளா் எஸ். மோனிஷ் ஆகியோா் வழிகாட்டலில் பள்ளி முதல்வா் வி. தாசிஸ் அருண், துணை முதல்வா் எஸ். சுகன்யா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...