காரைக்காலில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுவை கல்வித் துறை செயலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் ஏ. வின்சென்ட், செயலாளா் கே. ரவிச்சந்திரன் ஆகியோா் புதுவை கல்வித் துறை செயலருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :
காரைக்காலில் கல்வித் துறை துணை இயக்குநரகத்தில் போதுமான ஊழியா்கள் நியமிக்கப்படாததால் அத்துறை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருநள்ளாறு பகுதி தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளில் மின் வசதி இல்லாமல் மாணவா்கள் அவதிப்படுகின்றனா். இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்த கடந்த ஓராண்டாக ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இப்பள்ளியில் ஒரு கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக இடிக்காமல் பொதுப்பணித் துறை ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளது ஏற்புடையதல்ல. பல பள்ளிக் கட்டடங்கள் இதுபோன்று உள்ளதை கல்வித் துறை செயலகம் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆசிரியா்கள் நியமனத்தை புதுவை அரசு விரைந்து செயல்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.