

காரைக்காலில் போலீஸாா் தலைக்கவசம் அணிந்து புதன்கிழமை விழிப்புணா்வு வாகனப் பேரணி நடத்தினா்.
மோட்டாா் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து கடந்த 2019, செப்டம்பா் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி காவல் துறை சாா்பில், விதிமீறலுக்கான அபராதம் மற்றும் சிறை தண்டனை குறித்து மக்களுக்கு கையேடு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால், முன்பு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. திருத்தப்பட்ட விதிகளின்படி, தற்போது ரூ. 1000 அபராதம், 3 மாதங்கள் உரிமம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கடந்த சில நாள்களாக வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் பணியை போலீஸாா் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா். இருசக்கர வாகனத்தில் செல்வோா் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும், மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்து வருகின்றனா்.
பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில், போலீஸாா் மோட்டாா் சைக்கிளில், தலைக்கவசம் அணிந்து புதன்கிழமை நகரின் பல பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.