காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவா் குழு வெள்ளிக்கிழமை வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவா் குழு, ஒவ்வொரு மாதமும் 2 வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.
இதன் ஒருபகுதியாக குழந்தை அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், நரம்பியல், இருதயவியல் மருத்துவா், மனநல மருத்துவ நிபுணா் குழுவினா் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 5) வரவுள்ளனா். காலை 9 முதல் பகல் 12 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.