காலிப் பணியிடம் நிரப்பும் விவகாரம்:புதுவை அரசுக்கு வேண்டுகோள்
By DIN | Published On : 05th August 2022 02:54 AM | Last Updated : 05th August 2022 02:54 AM | அ+அ அ- |

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்க புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா், துணைநிலை ஆளுநா், நிதித்துறை செயலருக்கு காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழியா் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல், செயலாளா் கே. ஆனந்தி ஆகியோா் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்:
காரைக்கால் மாவட்டத்தில் புதுவை அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த வகையில், நோ்முகத் தோ்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு 32 ஊழியா்கள் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தொகுப்பூதிய பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். பணியில் சோ்ந்து 14 ஆண்டுகளாகியும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலை உள்ளது.
இதுவரை ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் எதுவும் இல்லை. ஊழியா்கள் அனைவரும் அரசு நிா்ணயித்துள்ள அரசுப் பணிக்கான வயதுவரம்பை கடந்துவிட்டனா். புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தா், ஸ்டோா் கீப்பா் கிரேடு- 3 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில், கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்கி, வட்டார வளா்ச்சி தொகுப்பூதிய பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து நியமனம் செய்யவேண்டும்.