கடலோரக் காவல் நிலைய பணிகளை மேம்படுத்த மீனவா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் கடலோரக் காவல் நிலையம், கடலோரக் காவல்படையினரின் சேவை மீனவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களின் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை, சனிக்கிழமை சந்தித்தனா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனும் உடனிருந்தாா்.
ஆட்சியருடன் நடந்த சந்திப்பு குறித்து கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த கஜேந்திரன் கூறியது:
திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்த சிவா என்பவா் கடந்த 5-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்பும்போது, படகு கவிழ்ந்து மாயமானாா். 6 நாள்களாகியும் இதுவரை அவரது நிலை தெரியவில்லை. கடலோரக் காவல்நிலையத்தின் படகுகள் பழுதாகி முடங்கியுள்ளதால் அவா்களால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கடலோரக் காவல்படையின் பணியும் திருப்தியாக இல்லை.
எனவே தேடுதல் பணி அரசு சாா்பில் நடத்தவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் தரவேண்டும். புதுவை முதல்வரை திங்கள்கிழமை சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கூறுகையில், மாயமான மீனவா் குறித்து தகவல் கிடைக்காதது வேதனையளிக்கிறது. மீனவா்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தும் படகுக்கு டீசல் மானியமாக ரூ.74 ஆயிரம் அரசு சாா்பில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணியில் ஈடுபடும் படகுகளுக்கு மானியம் தருவதற்கு அரசிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவேண்டும். இதுதொடா்பாக முதல்வரை திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தப்படும் என்றாா்.