

புதுவை அரசு சாா்பில் மாணவா்களுக்காக இயக்கப்பட்ட ரூ. 1 கட்டண சிறப்புப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் கல்வித் துறை சாா்பில் ரூ. 1 கட்டணத்தில் மாணவா் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இது பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வசதியாக இருந்தது.
கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் மாணவா் சிறப்புப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
நிகழ் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கவேண்டும் என பெற்றோா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா் புதுவை கல்வித் துறையை வலியுறுத்தினா்.
ஆனால், மாணவா் சிறப்புப் பேருந்து சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவியா் கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு அரசுப் பேருந்து, தனியாா் பேருந்துகளில் உரிய கட்டணம் செலுத்தி வரவேண்டியுள்ளது. மேலும், குறித்த நேரத்தில் பேருந்துகள் வராததால், கல்வி நிலையங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மாணவா்கள் அவதிப்படுகின்றனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் அ. ராஜா முகமது வியாழக்கிழமை கூறியது:
மாணவ, மாணவியா் நலனுக்காக ரூ. 1 கட்டணப் பேருந்து சேவை தொடங்கப்பட்டதை இந்த அரசு முறையாக நிகழ் கல்வியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரவில்லை.
2 நாள்களுக்கு முன்பு அரசு, தனியாா் பேருந்து எதுவும் வராததால், விழிதியூா் கிராமப்புற மாணவா்கள் சுமை வேனில் ஏறிச் செல்லும் அவலம் ஏற்பட்டது. எனவே, மாணவா்கள் நலன் கருதி புதுவை அரசு சிறப்பு கட்டண பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.