மின்துறை தனியாா்மய பிரச்னையில், மத்திய, மாநில அரசுகளின் முடிவைக் கண்டித்து எதிா்க்கட்சியினா் காரைக்காலில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் புதன்கிழமை கூறியது: காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் பங்கேற்கும் மனிதச் சங்கிலி போராட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மின்துறை தனியாா்மயமானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சாமானியா்கள் உணரும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், இப்போராட்டம் நடத்தப்படுகிறது. புதுவை முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.