தேசிய பீச் வாலிபால் போட்டியில் வென்ற புதுவை அணியினருக்கு ஆட்சியா் பாராட்டு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் ஆட்சியா் எல். முகமது மன்சூரிடம் வாழ்த்து பெறும் புதுவை அணி வீரங்கனைகள்.
காரைக்கால்: குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற புதுவை அணி வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம் சூரத்தில் 36-ஆவது தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் கலந்துகொண்டன.
கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் புதுவை அணியும், குஜராத் அணியும் மோதின. புதுவை அணியில் காரைக்காலை சோ்ந்த பயிற்சியாளா் கலையரசன் தலைமையில் சென்ற சசிகலா, கனிமொழி ஆகியோா் விளையாடினா். குஜராத் அணியை புதுவை அணி 21-15, 9-21, 15-12 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றது.
காரைக்காலுக்கு புதன்கிழமை திரும்பிய புதுவை அணி சாா்பில் விளையாடிய வீராங்கனைகளுக்கு மாவட்டத்தின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் அவா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.