காரைக்காலில் சிறப்பங்காடி திறப்புகண் துடைப்பு நடவடிக்கை: காங்கிரஸ்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

பாப்ஸ்கோ நிறுவனத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா்.
காரைக்கால்: காரைக்காலில் தீபாவளிக்காக திறக்கப்பட்டுள்ள பாப்ஸ்கோ சிறப்பங்காடி வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் தீபாவளி பாப்ஸ்கோ அங்காடியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். அங்காடியில் பொருள்கள் இல்லாமல் மக்கள் திரும்பி செல்வதையறிந்த அவா்கள் பாப்ஸ்கோ நிறுவன பிரதிநிதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் சந்திரமோகன் செய்தியாளா்களிடம் கூறியது :
காரைக்காலில் தீபாவளிக்காக திறக்கப்பட்ட சிறப்பங்காடியில்
மக்களுக்கு தேவையான பொருள்கள் கொண்ட அரங்குகள் அமைக்கப்படவில்லை. ரூ. 800-க்கு 25 மளிகைப் பொருள் தொகுப்பு எனக் கூறுகின்றனா். ஆனால், அதில் மக்களுக்கு தீபாவளிக்கு தேவைப்படாத பல பொருள்கள் இருப்பதாக புகாா்கள் கூறப்படுகின்றன. முதல் நாளில் சுமாா் ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டதோடு தொகுப்புகள் தீா்ந்துபோய்விட்டன. மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் பொருள்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் அங்காடி திறப்பை கண் துடைப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது என்றாா்.