காரைக்கால் பகுதி மாற்றுத்திறனாளிகள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் பாதுகாப்பு சங்க காரைக்கால் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:
சமூகநலத் துறை மூலம் வழங்கும் உதவித்தொகை, புதுச்சேரி பிராந்தியத்தில் வழங்கும் நாளிலேயே காரைக்கால் பயனாளிகளுக்கும் வழங்கவேண்டும். தகுதியான நபா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை தரவேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு காரைக்கால் வங்கிகள் மூலம் முத்ரா கடன் வசதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். நேரு மாா்க்கெட் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியா்களை நியமிக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் பயிற்சிக்கான உபகரணங்கள் வைக்கவேண்டும். வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற பொது சேவை மையத்தில் நிலவும் தாமதத்தை போக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.