ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் தலைமையில் நலவழித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய துணை ஆட்சியா், விபத்து குறித்து தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவாக செல்லவேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு புகாா்கள் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும்.
விரைவில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
கூட்டத்தில் பயிற்சி ஆட்சியா் சம்யக் எஸ்.ஜெயின், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அங்காளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.