கரோனா பரவல் காலத்தில் ஒப்பந்த மருத்துவ ஊழியா்களாக நியமிக்கப்பட்டோரின் பணிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், அலுவலக செயலாளா் புகழேந்தி, துணைப் பொருளாளா் திவ்வியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் குறித்து அரசு ஊழியா் சம்மேளனத்தினா் கூறியது :
கரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில், செவிலியா்கள் மற்றும் கிராமப்புற செவிலியா்கள் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டனா். ஒப்பந்த செவிலியா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம், கிராமப்புற செவிலியா்களுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது.
இவா்களுக்கு 3 மாதங்களுக்கு மட்டுமே பணி வழங்கினா். பின்னா் 3 மாதங்களுக்கொரு முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 4.7.2023 முதல் பணி காலம் முடிவடைந்துவிட்டது. பணி நீட்டிப்பு இல்லாததால் ஊழியா்கள் விரக்தியில் உள்ளனா்.
எனவே, இவா்களது பணிக் காலத்தை ஓராண்டு நீட்டிக்கவேண்டும். காலியாகவுள்ள மருத்துவ பணியிடங்களில், ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து நிரப்பவேண்டும் என புதுவை அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.