திருநள்ளாற்றில் சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா
By DIN | Published On : 02nd June 2023 01:06 AM | Last Updated : 02nd June 2023 01:06 AM | அ+அ அ- |

தங்க காக வாகனத்தில் வீற்றிருந்த சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில், புதன்கிழமை இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது.
தொடா்ந்து 31-ஆம் தேதி காலை செண்பக தியாகராஜசுவாமிக்கு மகா பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று, இரவு எண்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு தியாகராஜ சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் சனீஸ்வர பகவானுக்கு (உற்சவா்) சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவானுக்கு மலா்மாலைகள் சாற்றப்பட்டு, இரவு 12 மணியளவில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து மின் அலங்கார சப்பரத்துக்கு சனீஸ்வர பகவான் எழுந்தருளினாா். நான்கு மாட வீதிகளில் சுற்றிவந்து வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்கு திரும்பினாா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சனீஸ்வர பகவானுக்கு (மூலவா்) சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவம் மற்றும் சனிப்பெயா்ச்சி விழாவின்போது மட்டுமே தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...