தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உன்மத்த நடன உற்வசம்
By DIN | Published On : 26th May 2023 05:24 AM | Last Updated : 26th May 2023 05:24 AM | அ+அ அ- |

உன்மத்த நடனத்துடன் புதன்கிழமை இரவு யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய செண்பக தியாகராஜசுவாமி.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜசுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வவரா் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நிகழ்ச்சியாக விநாயகா் உற்சவம், சுப்பிரமணியா் உற்சவம் நடைபெற்றது. கடந்த 23-ஆம் தேதி அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.
இதில் உன்மத்த நடன நிகழ்வு புதன்கிழமை இரவு தொடங்கியது. தியாகராஜரும், நீலோத்பாலாம்பாளும் உன்மத்த நடன கோலத்தில் யதாஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினா். இரவு முழுவதும் அங்கிருந்த தியாகராஜருக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு வசந்த மண்டபத்திலிருந்து தியாகராஜா் யதாஸ்தானம் கொண்டு செல்லப்பட்டாா். பிராகாரத்திலிருந்து யதாஸ்தானம் திரும்பும்போது ஒற்றை மணி அடிக்கப்பட்டது. அதே நேரத்தில் மூலவரான தா்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா: வரும் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தா்பாரண்யேஸ்வரா் தங்க ரிஷப வாகனத்திலும், பஞ்ச மூா்த்திகள் அதனதன் வாகனங்களில் மின் அலங்கார சப்பரப் படலுக்கு எழுந்தருள தெருவடைச்சான் என்கிற சப்பரம் வீதியுலா நடைபெறுகிறது. 30-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.