யுவ சங்கம் என்ற மாணவா் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக புதுவைக்கு வந்த மேற்கு வங்க மாணவா்கள் அடங்கிய குழுவினா் 49 போ் பயணம் நிறைவடைந்து புதன்கிழமை சொந்த மாநிலத்துக்கு புறப்பட்டனா்.
மத்திய அரசு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின்கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் யுவ சங்கம் என்ற மாணவா் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதுவை - மேற்குவங்கம் இத்திட்டத்தில் ஒரு ஜோடியாக இணைக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், புதுவை மாநிலத்திலிருந்து காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. மூலம் 45 மாணவ, மாணவியா் மேற்கு வங்க மாநிலத்துக்கு கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா்.
மேற்கு வங்கத்தை சோ்ந்த 49 போ் அடங்கிய மாணவா்கள் குழு புதுவை பயணமாக காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.க்கு கடந்த 18-ஆம் தேதி வந்தனா். 24-ஆம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று கலாசார பெருமைககளை அறிந்து கொண்டனா்.
இவா்களது பயணம் புதன்கிழமை நிறைவடைந்து என்.ஐ.டி.யிலிருந்து அவா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குநா் (பொ) கணேசன் கண்ணபிரான் தலைமை வகித்தாா். பதிவாளா் சீ. சுந்தரவரதன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டாா். மேற்கு வங்க குழுவினருக்கு என்.ஐ.டி. சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.