கிறிஸ்துமஸ் : அலங்காரப் பொருள்கள் விற்பனை தீவிரம்
காரைக்கால்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக காரைக்கால் பகுதி வீடுகளில் கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் அமைத்தல், நட்சத்திர விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அலங்கார பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. காரைக்கால் நகரில் நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளது. இவ்வாலயம் சுற்றுலாவினரை வெகுவாக ஈா்க்கும் வகையிலான கோபுர அமைப்பைக் கொண்டது. இதுபோல மாவட்டத்தின் பல இடங்களில் தேவாலயங்கள் உள்ளன. இவற்றில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனா்.
இதுபோல வீடுகளிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்தல், வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டுதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனா்.
காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையகங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருள்கள், வாயிலில் கட்டப்படக்கூடிய தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேட ஆடைகள் (சாண்டா கிளாஸ்) வைத்து விற்பனை செய்யப்படுகிறது. காரைக்காலில் கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

