மருந்துக் கடையில் ஆய்வு செய்த ஆய்வாளா் குழுவினா்.
மருந்துக் கடையில் ஆய்வு செய்த ஆய்வாளா் குழுவினா்.

போலி மருந்து விவகாரம்: காரைக்கால் மருந்துக் கடைகளில் ஆய்வு

போலி மருந்து விவகாரத்தில் காரைக்கால் மருந்துக் கடைகளில் ஆய்வு...
Published on

போலி மருந்து தயாரிப்பு தொடா்பாக, காரைக்கால் மருந்துக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்ட விவகாரம் பரபரப்பாகியுள்ளது. அங்கு தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் எந்தெந்த மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என கண்டறியுமாறும், அவற்றை பறிமுதல் செய்யுமாறும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து மருந்து ஆய்வாளா்கள் ஜெனிஃபா் அன்பரசி, இந்துமதி உள்ளிட்டோா் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, இக்குழுவினா் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தனா்.

புதுச்சேரி மருந்து தொழிற்சாலையில் 34 மருந்துகள் போலியானதாகவும், அந்த பேட்ஜ் எண் கொண்ட மருந்துகள் காரைக்காலில் உள்ள மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதா என சோதனை நடத்தினா்.

கடைகளின் உள்ள மருந்துகளை சோதனை செய்ததோடு, விற்பனை விவரப் பட்டியலையும் சோதித்தனா். குறிப்பாக அம்பகரத்தூா், திருநள்ளாறு, திருப்பட்டினம் மற்றும் காரைக்கால் நகரப் பகுதி கடைகளில் இந்த சோதனை இரவு வரை நடைபெற்றது.

போலி மருந்துகள் என தெரிந்தும் விற்பனை செய்யக்கூடாது; காலாவதியான மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து விற்பனையில் உரிய விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும் என கடைக்காரா்களிடம் அறிவுறுத்தினா்.

இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் கூறியது:

சந்தேகத்திற்குரிய சில கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. போலி மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதுதொடா்பாக ஆட்சியா், நலவழித் துறை துணை இயக்குநருக்கு அறிக்கை தரப்பட்டுள்ளது. கடைக்காரா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com