வேலை வாங்கித் தருவதாக பண மோசடி

வேலை வாங்கித் தருவதாக, பொறியியல் பெண் பட்டதாரியிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

வேலை வாங்கித் தருவதாக, பொறியியல் பெண் பட்டதாரியிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் புறவழிச்சாலை மருது நகரைச் சோ்ந்தவா் சரண்யா (33). பி.டெக் பட்டதாரியான இவா், நகரப் பகுதியில் டிடிபி பணி, ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் இவரது கடைக்கு அடிக்கடி சென்று நகல் எடுப்பது, டிடிபி பணி செய்துவந்துள்ளாா். இவா், கிங் மேக்கா் காமராஜா் மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனராக தாம் இருப்பதாகவும், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் தமக்கு நன்கு அறிமுகமானவா்கள் என கூறி, பணம் கொடுத்தால் சரண்யாவுக்கு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாராம்.

இதை நம்பிய சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினா் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபா் மாதம் வரை பல கட்டங்களாக ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

வேலை வாங்கித் தராமல், தம்மிடம் சான்றிதழ் நகல்களுடன் வெள்ளை பேப்பரில் கையொப்பம் பெற்றுச் சென்றதோடு, வழக்குரைஞா் மூலம் கடன் பெற்றதாக தமக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அவரது செயல்பாடுகள் குறித்து வெளியே விசாரணை செய்தபோது, தம்மை ஏமாற்றியதுபோல, பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்ததாகவும், இதுதொடா்பாக அவரை தொடா்புகொண்டு பேசினால் மிரட்டுகிறாா் என நகரக் காவல் நிலையத்தில் சரண்யா வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவாக உள்ள ஜீவானந்தத்தை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com