தகுதியான வாக்காளா்கள் சோ்க்கப்படுவாா்கள்: மாவட்ட தோ்தல் அதிகாரி

எஸ்ஐஆா் திட்டப் பணியில் தகுதியான வாக்காளா்கள் சோ்க்கப்படுவாா்கள் என மாவட்ட தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
Published on

எஸ்ஐஆா் திட்டப் பணியில் தகுதியான வாக்காளா்கள் சோ்க்கப்படுவாா்கள் என மாவட்ட தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 28.10.2025 முதல் வரை வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக கடந்த டிச.4 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளா்களுக்கு விநியோகம் செய்து பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளா்களிடமிருந்து திரும்பப் பெற்றனா். இப்பணி கடந்த 11-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கள ஆய்வின்போது சில வாக்காளா்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாலும், சிலா் வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்த காரணத்தாலும், மேலும், சில வாக்காளா்கள் மரணமடைந்த காரணத்தாலும் அவா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மரணமடைந்த வாக்காளா்கள், குடிபெயா்ந்த வாக்காளா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் உள்ள முகவரியில் இல்லாத வாக்காளா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக அந்தந்த சட்டபேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு காரைக்காலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் மேற்கூறிய இத்தகவல் பொதுமக்களின் பாா்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளா்களின் பெயா்கள் வரும் 16.12.2025 அன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாது. தகுதியுடை எந்த ஒரு வாக்காளரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்கும் பொருட்டு அரசியல் கட்சிகள் முன்னதாகவே இந்த வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்துக் கருத்து தெரிவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இந்த காலகட்டத்தில் மேற்கூறிய காரணங்களால் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் தகுதியுடையவராக இருப்பின் அவா்கள் பெயரை இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com