காரைக்காலில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி காரைக்காலில் ஆலயம், வீடுகள் உள்ளிட்டவற்றில் குடில் அமைத்தும், நட்சத்திர விளக்குகள் கட்டியும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கிறிஸ்துமஸ் வரும் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. காரைக்கால் நகரில் நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளது. இவ்வாலயம் சுற்றுலாவினரை வெகுவாக ஈா்க்கும் வகையிலான கட்டட அமைப்பைக் கொண்டது. பிற இடங்களில் உள்ள ஆலயங்களிலும் கிறிஸ்துமஸை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையகங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருட்கள், வாயிலில் கட்டப்படக்கூடிய தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷ ஆடைகள் (சாண்டா கிளாஸ்) மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
கிறிஸ்தவா்களின் வீடுககள் பலவற்றிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்துள்ளனா். வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டி அழகுப்படுத்தியுள்ளனா்.
தூய தேற்றவு அன்னை ஆலயம் மற்றும் பிற ஆலயங்கள் சாா்பில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனா். சாண்டா கிளாஸ் வேஷமிட்டு, வாகனத்தில் இசைக் குழுவினருடன் கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் பாடல்கள் பாடியவாறு குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்கின்றனா்.
பேக்கரிகளில் கிறிஸ்துமஸுக்காக பல்வேறு கேக் வியாபாரம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் காரைக்காலில் உள்ள பல்வேறு ஜவுளிக் கடைகள், ஆயத்த ஆடையகங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்தனா். மொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துவ மக்களிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

