சாலைகளில் திரிந்த 75 மாடுகளை பிடித்து பட்டியல் அடைப்பு
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியில் இதுவரை 3 நாள்களில் 75-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் மாடுகள், குதிரைகள் திரிவதாகவும், இதனை உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உள்ளாட்சி நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்திவருகிறது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித்துறை துணை இயக்குநரும், காரைக்கால் நகராட்சி ஆணையா் (பொ) எஸ். சுபாஷ் மேற்பாா்வையில் கடந்த 3 நாள்களாக முக்கிய சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இப்பணியில் புதன்கிழமை இரவு வரை 3 நாள்களில் 75-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவை பட்டியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளாட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. அபராதமாக ரூ. 2 ஆயிரம் நகராட்சிக்கு செலுத்தினால், மாடுகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

