ஆற்றில் விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டு நிதியுதவி
ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மத்திய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சோ்ந்த அப்பாவுசெட்டி மகன் சேகா் என்பவா் கடந்த 8.1.2025 அன்று காரைக்கால் பகுதி முல்லையாற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு பிரிவான குழு விபத்துக் காப்புறுதித் திட்டம் உள்ளது. மீனவா்களின் குழு விபத்து காப்புறுதிக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவரது காப்புறுதி உதவியை வழங்க அவரது மனைவி அன்னலட்சுமி புதுவை மீன்வளத்துறையில் விண்ணப்பம் அளித்தாா். காப்புறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்வில் காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.

