வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடமும் வர்த்தகர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற செயல் அலுவலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் கு.குகன். இவர் கடந்த 18 மாதங்களாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றியவர். இவர் பணிக்காலத்தில் பல்வேறு வகையான திட்டங்களை வைத்தீஸ்வரன்கோயில் பகுதிக்கு கொண்டுவந்து செயல்படுத்தினார். சாலை வசதி, மயானத்திற்கு சாலை வசதி, மயான கொட்டகை சீரமைப்பு, ஈமகிரியை மண்டபம் மற்றும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாகசெய்வித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பேரூராட்சி பகுதியில் செயல்படுத்தினார்.
இதையும் படிக்கலாமே- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மேலும் பேரூராட்சிக்கு தனி முகநூல், வாட்ஸ் அப் தொடங்கி மக்களின் குறைகளை அதன் மூலம் நேரடியாக கேட்டறிந்து உடன் தீர்வு கண்டதால் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதி மக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினராலும் ஈர்க்கப்பட்டார். அதோடு கரோனா காலங்களில் வெளியே சென்றுவராமல் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும் வகையில் அவர்களுக்கு சமையல் போட்டி போன்ற பல்வேறு ஆரோக்கிய போட்டிகளை ஆன்லைன் மூலம் நடத்தி பரிசுகளை வழங்கி முதன்மையாகத் திகழ்ந்தார்.
அதோடு ஆடிப்பட்டம் தேடி விதை என்று மாடித்தோட்டம் வளர்ப்புக்கு பொதுமக்களிடம் முனைப்பு ஏற்படுத்தினார். வைத்தீஸ்வரன்கோவில் பகுதிக்கு நீண்ட ஆண்டு தேவையாக இருந்து வந்த தனி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிட முயற்சி எடுத்து அதற்கு தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஆம்புலன்ஸ் வாங்கப் பெருமுயற்சி செய்து வெற்றி பெற்றார்.
இவ்வாறு பொதுமக்களிடமும், அனைத்து அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் நற்பெயர் பெற்று செயல்பட்டுவந்த பேரூராட்சி செயல் அலுவலர் நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் பணி மாறுதல் உத்தரவு வரப்பெற்று பணி மாறுதலில் சென்றார். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் வழியனுப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வர்த்தகர்கள் வியாபாரிகள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க வழியனுப்பி வைத்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் தங்கள் பகுதியை விட்டு மாற்று இடம் செல்வதால் வழியனுப்பு விழாவில் பங்கேற்ற பலர் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டனர் . தொடர்ந்து பேரூராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று குகன் நன்றியைத் தெரிவித்துப் புறப்பட்டு சென்றார்.