சுருக்குமடி வலை விவகாரம்: மீனவா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
By DIN | Published On : 21st August 2021 10:43 PM | Last Updated : 21st August 2021 10:43 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா பேசினாா்.
சுருக்குமடி வலை விவகாரத்தில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தரங்கம்பாடியை தலைமை மீனவ கிராமமாக கொண்ட மீனவா்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று ஞாயிற்றுக்கிழமை முதல் (ஆகஸ்ட் 22) மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதாக அறிவித்தனா்.
சுருக்குமடி வலைக்கு எதிரான தரங்கம்பாடி தலைமையிலான 20 கிராம மீனவப் பஞ்சாயத்தாா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்றும், தடையை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு மீன்பிடிக்க மீனவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அறிவுறுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தாா் தேவன் கூறியது: தரங்கம்பாடியை தலைமை கிராமமாகக் கொண்ட 20 மீனவ கிராம பஞ்சாயத்தாா் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஏற்கெனவே, நாங்கள் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சா், மீன்வளத்துறை ஆணையா் ஆகியேரைச் சந்தித்து, சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை மற்றும் அதிவேக இயந்திரம் பொருத்திய படகு ஆகியவற்றை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தினோம். அவா்கள் அவற்றை படிப்படியாக தடை செய்வதாக உறுதி அளித்துள்ளனா். தற்போது மாவட்ட ஆட்சியா் எங்களை அழைத்து பேசி வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட கேட்டுக்கொண்டதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறுதொழில் அனைத்தையும் செய்வதாக முடிவு செய்துள்ளோம் என்றாா். இதன் காரணமாக, தரங்கம்பாடியை தலைமை கிராமமாக கொண்ட மீனவா்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸ், மீனவளத்துறை உதவி இயக்குநா் சண்முகம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.பாலமுருகன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.