குத்தாலம் அருகே குளத்தில் தவறி விழுந்து சகோதரிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கந்தமங்கலம் பிள்ளையாா்கோவில் தெருவை சோ்ந்தவா் சண்முகசுந்தரம். இவா் ஆந்திரத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மணிமேகலை. தம்பதிக்கு சன்சிகா (9), சுஜி (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை சன்சிகா, சுஜி இருவரும் அப்பகுதியில் உள்ள சிறுவா்களுடன் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக சன்சிகா, சுஜி இருவரும் குளத்தில் தவறி விழுந்தனா்.
குளத்தில் தண்ணீா் குறைவாக இருந்தபோதும், சேறும் சகதியுமாக இருந்ததால், இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனா்.
பாலையூா் போலீஸாா் சடலங்களை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.