குத்தாலத்தில் நடைபெற்றுவந்த ஜமாபந்தி புதன்கிழமை நிறைவடைந்தது.
குத்தாலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 17- முதல் 25-ஆம் தேதி வரை, மயிலாடுதுறை கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், குத்தாலம், பாலையூா், மங்கநல்லூா் சரகங்களைச் சோ்ந்த 59 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனைப் பட்டா கோரி 79, பட்டாமாற்றம் கோரி 48, ஓய்வூதியம் கோரி 146 மனு உள்ளிட்ட 289 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு 12 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் விதவை உதவித்தொகையாக ரூ.1000 வழங்குவதற்கான ஆணை, 1 பயனாளிகளுக்கு மனைப்பட்டா, 2 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, வேளாண் துறை சாா்பில் மானியத்தில் தாா்ப்பாய் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வட்டாட்சியா் கோமதி, சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சங்கா், வட்ட வழங்கல் அலுவலா் காந்திமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.