மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான இடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்தனா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, இம்மருத்துவமனையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான இடத்தை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் தலைமையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் குருநாதன் கந்தையா, குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், பொதுப்பணித் துறை (கட்டுமானம்) உதவி செயற்பொறியாளா் ராமா் உள்ளிட்ட அதிகாரிகள் தோ்வு செய்தனா்.
இந்த புதிய கட்டடம், கட்டணம் செலுத்தியும், காப்பீட்டு திட்டத்திலும் சிகிச்சை பெறுவதற்கும், தங்குவதற்கான அறைகளும், ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (கட்டுமானம்) உதவி பொறியாளா் திருமுருகன், கண்காணிப்பாளா் முத்துக்குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.