ஜாம்பவானோடை தா்கா கந்தூரி விழா நிறைவு
By DIN | Published On : 11th December 2022 12:23 AM | Last Updated : 11th December 2022 12:23 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை தா்காவின் 721-ஆம் ஆண்டு கந்தூரி விழா வெள்ளிக்கிழமை இரவு கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
இவ்விழா நவம்பா் 25- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 14 நாட்கள் சிறப்புத் தொழுகை, நோ்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் இன்னிசை கச்சேரி போன்றவை நடைபெற்று வந்தன. பிரதான நிகழ்வான சந்தனக்கூடு விழா கடந்த 4-ஆம் தேதி இரவு தொடங்கி 5-ஆம் தேதி அதிகாலை தா்கா சரிபுக்கு சந்தனம் பூசும நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், டிசம்பா் 6-இல் உள்ளூா் மக்கள் பங்கேற்கும் அந்தி கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு புனித கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் கந்தூரி விழா நிறைவு பெற்றது. முன்னதாக, தாவூதியா மஜ்லிஸில் உலக அமைதிக்காக புனித மௌலூது ஷரீபு ஓதப்பட்டு, இரவு 8 மணியளவில் சேக்தாவூது ஆண்டவா் ஜியாரத் முன்னபாக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, தா்கா முதன்மை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா்அலி சாஹிப் தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டு புனித கொடி இறக்கப்பட்டது.
அப்போது, இவ்விழாவுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், காவல்துறையினருக்கு தா்கா நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக எஸ்.எஸ். பாக்கா்அலி கூறினாா்.