மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து, சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும், தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், புதன்கிழமை இரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு லாரியை விடுவித்தனா்.