ஜீவன் ரக்ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் என்ற விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கமும், தனக்கு காயம் ஏற்படினும் வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுவோருக்கு ஜீவன் ரக்ஷா பதக்கமும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மண்டல முதுநிலை மேலாளரின் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் வளாகம், நாகப்பட்டினம் 611 003 எனும் முகவரிக்கு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04365-253059 அல்லது 7401703497 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.