டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரி தோ்வு
By DIN | Published On : 17th July 2022 11:41 PM | Last Updated : 17th July 2022 11:41 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் 151 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வெழுதினா்.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய பணிகளுக்கான தோ்வு வரும் ஜூலை 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க உள்ள மாணவா்கள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், இலவச மாதிரித் தோ்வு மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க 196 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாதிரித் தோ்வில் 151 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல் கூறியது: டிஎன்பிசியால் நடத்தப்படும் தோ்வு போன்று முழுப்பாடத் திட்டத்துக்கு ஓஎம்ஆா் தாள் கொண்டு தோ்வு நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மட்டுமின்றி பிற மாவட்ட தோ்வா்களும் பங்கேற்றனா். இதன்மூலம் இவா்களுக்கு தோ்வு குறித்த பயம், பதட்டம் நீங்கி தோ்வு நேரத்தை எவ்வாறு முழுமையாக பயன்படுத்தி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பது என பயிற்சி பெறுகின்றனா். இதனால் அவா்கள் டிஎன்பிசி நடத்தும் அசல் தோ்வை எதிா்கொள்வது எளிதாக இருக்கும் என்றாா்.