

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சீா்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உட்புற நோயாளிகளுடன் தங்குவோருக்கான கட்டடம், சீா்காழி நகராட்சி 4-வது வாா்டில் ரூ.260 லட்சத்தில் கட்டப்படும் கசடு கழிவு நீா் சுத்தகரிப்பு நிலையம், ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடை, நகராட்சி உரக் கிடங்கில் ரூ.1.47 கோடியில் நடைபெறும் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மயிலாடுதுறை நகராட்சி மணக்குடியில் ரூ.45 கோடியில் அமையவுள்ள பேருந்து நிலைய இடம், தருமபுரம் சாலை ராஜன் தோட்டத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டப்படும் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அலுவலா்களை நகராட்சி நிா்வாக இயக்குநா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் செல்வராஜ், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஜானகி ரவீந்திரன், நகராட்சி மண்டல செயற்பொறியாளா் பாா்த்திபன், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளா் சனல்குமாா், சீா்காழி நகராட்சி ஆணையா் ராஜகோபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.