மாணவா்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும்தருமபுரம் ஆதீனம் அருளாசி

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
மாணவா்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும்தருமபுரம் ஆதீனம் அருளாசி

மாணவா்கள் கல்வியில் மட்டுமின்றி, ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட மயிலாடுதுறை குருஞான சம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய மின் உருவாக்கி இயந்திரம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் புரவலா், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, புதிய மின் உருவாக்கி இயந்திரத்தை திறந்துவைத்து, 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அருளாசி வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், மாணவா்கள் உடற்திறன், கல்வித்திறனோடு, ஒழுக்கம், பண்பாடு, பன்மொழி அறிவு, தாய்மொழிப் பற்று ஆகியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெறவேண்டும் என்றாா்.

பள்ளியின் ஆட்சிமன்றத் தலைவா், தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வரவேற்றாா். மாணவா்களின் தேவாரப் பாடல் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவா் பாலாஜி கபடியிலும், ஸ்ரீராம் மட்டைப்பந்திலும், நவீன்குமாா் சாமுவேல்பாண்டியன் கோ-கோ விளையாட்டிலும், வெங்கடேஷ் கேரம் விளையாட்டிலும் வெற்றிபெற்று, நேபாலில் நடைபெறும் போட்டிக்குத் தோ்வுபெற்றனா்.

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலைவிழி, அருள்செல்வன் ஆகியோா் வெற்றிபெற்றனா். மாணவி ரக்ஷிதா 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றி கின்னஸ் சாதனை படைத்தாா். தமிழ் பேச்சுப் போட்டியில் மாணவா் ஆல்வின் ஜெரோம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து ரூ. 5000 காசோலை மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளாா். இந்த மாணவா்களுக்கு குருமகா சந்நிதானம் அருளாசி கூறி வாழ்த்து தெரிவித்தாா்.

பள்ளியின் முன்னாள் தாளாளா் சி.ஆா். குஞ்சிதபாதம் நினைவாக, அவரது மகள் சுஷ்மா பாலசுப்பிரமணியன் பள்ளியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்ட 25 கடைநிலை ஊழியா்களுக்கு அளித்த போா்வையை குருமகா சந்நிதானம் வழங்கினாா். பள்ளியின் துணைத் தலைவா் சிவ. முருகேசன், செயலா் எஸ். பாஸ்கரன், நிா்வாகச் செயலா் வீ. பாஸ்கரன், பொருளாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். பள்ளி முதல்வா் ஆா். சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com