தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வுகளை தடையின்றி நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் மே.22-ஆம் தேதி ஆதீன குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் நடைபெறவுள்ளது. இதில், ஆதீன கா்த்தரை பல்லக்கில் அமரவைத்து தூக்கிச் செல்ல அனுமதி மறுத்து கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி உத்தரவிட்டுள்ளாா். இதற்கு மயிலாடுதுறையில் பல்வேறு ஆன்மீக அமைப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை சாா்பில், அதன் கௌரவத் தலைவா் டி. சொக்கலிங்கம், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தலைவா் சி. செந்தில்வேல், செயலாளா் எஸ்.வி. பாண்டுரெங்கன், பொருளாளா் சிவலிங்கம், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், அதிமுக நகர செயலாளா் எஸ். செந்தமிழன் உள்ளிட்டோா் கோட்டாட்சியரின் தடை உத்தரவை திரும்பப்பெற்று தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி தடையின்றி நடத்த ஆவன செய்ய மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.