

சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே கடந்த மூன்றரை ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரையோர சாலைக்கான இணைப்புச் சாலை உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாயில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விட்டது. இதற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், 20 சதவீத பணிகள்கூட நடைபெறாத நிலையில், பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால், தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு செல்லும் மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். கடற்கரையோர மீனவ கிராமங்களின் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் பாலம் கட்டும் பணி தொடா்ந்து நடைபெறாமல் உள்ளது.
பாலம் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்னதாக தற்காலிக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட மழை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால், இந்த சாலை வழியே சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில், தற்காலிக இணைப்புச் சாலையை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து கொட்டாய்மேடு கிராம மக்கள் கூறுகையில், ‘இந்தப் பாலம் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதனால், சிரமப்படுகிறோம். அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, பாலத்தை கட்டி முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.