சீர்காழி பழைய பேருந்து நிலைய வர்த்தக சங்கத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளன. இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் சீர்காழி பழைய பேருந்து நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சீர்காழி பழைய பேருந்து நிலையம், காமராஜர் விதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கரோனோ காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது. இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் காலஅவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டுமே வாடகை விலக்கு அளித்தனர்.
மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை. அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.