கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி யானையின் மீது புனித நீர் எடுத்துவரப்பட்டது.
மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்திலான பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் வரும் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜையையொட்டி காவிரி ஆற்றில் இருந்து யானைமீது புனித நீர் எடுத்துவரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலிக்கிறார். கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வருகிற 9ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி 8 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ள நிலையில் இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதற்காக மயிலாடுதுறை மூவலூரில் காவிரி நதியில் இருந்து பட்டாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து, குதிரை, ஒட்டகம் புடைசூழ யானை மீது ஏறி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
இதையும் படிக்க- ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் பலி
கோயிலில் கஜ, அஸ்வ, கோ பூஜை மற்றும் ஒட்டகத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. மிக திருமஞ்சனம் செய்யப்பட்டு உத்ஸவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. காவிரியில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து 8 கால பூஜை நடத்தி வருகிற 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை தொழிலதிபர் சூரி.விஜயகுமார், சென்னை தொழிலதிபர் டெக்கான் என்.கே.மூர்த்தி, திருப்பணிச்செம்மல் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன் மற்றும்
கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.