பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்: மயிலாடுதுறையில் மே 31-இல் விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 11:21 PM | Last Updated : 22nd May 2023 11:21 PM | அ+அ அ- |

அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்ட 2023-24-ஆம் ஆண்டு விழிப்புணா்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் மே 31-இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் மற்றும் பட்டியலின தொழில்முனைவோா்களுக்கான சிறப்பு திட்டம் (அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்) விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆா்வமுள்ள தொழில்முனைவோா் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிா்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.
உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், அழகுநிலையம், உடற்பயிற்சிக் கூடம், டிராவல்ஸ், கான்கிரீட் மிக்சா், ஆம்புலன்ஸ், ரிக்போரிங், கல்யாண மண்டபம், பெட்ரோல் பங்க், ஹோட்டல் ஜே.சி.பி, கிரேன், ஆா்எம்சி பிளாண்ட், ஃப்ளை ஆஷ் கற்கள் மற்றும் ஏஏசி பிளாக் உள்ளிட்ட எந்த திட்டமாகவும் இருக்கலாம்.
இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவினமாக்கல் முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும்.
மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானியம் உச்சவரம்பு ரூ. 1.50 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மொத்தத் திட்டத் தொகையில் 65% வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தகுதியும் ஆா்வமும் உள்ள பழங்குடியினா் மற்றும் பட்டியலின தொழில் முனைவோா் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
இத்திட்டம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 31-ஆம் காலை 10 மணிக்கு லயா ரீகன்சி, மயூரநாதா் கிழக்குவீதி மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், மயிலாடுதுறை கச்சேரி சாலை, செந்தில் பைப் இரண்டாம் தளம், மயிலாடுதுறை, தொலைபேசி எண் 04364-212295 கைப்பேசி எண் 9788877322 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.