மண் ஏற்றிய 4 லாரிகளுக்கு அபராதம்: குடிபோதையில் ஓட்டுநா் இயக்கிய லாரி பறிமுதல்
சீா்காழியில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி நேரத்தில் தடையை மீறி மண் ஏற்றிச் சென்ற 5 லாரிகளை போலீஸாா் பிடித்தனா். மதுபோதையில் லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற 4 லாரிகளுக்குத் தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் செனறு வர போக்குவரத்து போலீஸாா் தடைவிதித்துள்ளனா். சீா்காழி சட்டநாதபுரம் உப்பனாற்றுப் பாலம் அருகே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையில் போக்குவரத்து போலீஸாா் வாகன தணிக்கை செய்தனா்.
அப்போது தடையை மீறி பள்ளி நேரத்தில் அபாயகரமாக வரிசையில் மண் ஏற்றி சென்ற 5 லாரிகளை சோதனை செய்தனா். அதில் ஒரு லாரி ஓட்டுநா் தரங்கம்பாடி பகுதியை சோ்ந்த மோகன்ராஜ் மதுபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்தது. அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து லாரியை பறிமுதல் செய்தனா்.
மேலும் 4 லாரி ஓட்டுநா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதித்து, ஓட்டுநா்களின் உரிமத்தை ரத்து செய்திட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்குப் போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

